மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள்!

மட்டக்களப்பு (Batticaloa) போதனா வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் முதன்முறையாக ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஹரிஹரன் கிருஸ்ணவேணி(Hariharan Krishnaveni)(25) எனும் தாயே கடந்த ஏப்ரல் மாதம் 5ம் திகதி இந்த குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

மட்டு போதனா வைத்தியசாலையில் இன்று(22) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் தாயும் குழந்தைகளும் நலமாக இருப்பதாக மட்டு போதனாவைத்தியசாலை பணிப்பாளர் கலாறஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார்.

ஒரே சுகபிரசவத்தில் 4 பிள்ளைகள்
மருத்துவத்துறையின் வரலாற்றில் இயற்கை முறையில் இவ்வாறு கருத்தரிப்பதானது அரிதான விடயமாகவே காணப்படுவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் சரவணன் தெரிவித்துள்ளார்.

இதன் 9ESAFTபோது, சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் கொண்டுவரப்பட்டு ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் பெ.மைதிலி உட்பட வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் கலந்துகொண்டனர்.

இயற்கையான கருத்தரிப்பு
இவ்வாறு ஒரு கருவில் நான்கு குழந்தைகள் பிறப்பது 5 இலட்சத்து 70ஆயிரம் பெண்களில் ஒருவருக்கு இடம்பெறுவதாகவும் அதுவும் செயற்கை முறையிலான கருத்தரிப்பு மூலமே அவ்வாறான விடயம் சாத்தியமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமது பிரசவத்திற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது தமக்கு சகல வழிகளிலும் உதவியவர்களுக்கு நான்கு பிள்ளைகளை பிரசவித்த தாயார் நன்றி தெரிவித்துள்ளார்.