திருகோணமலை விபத்தில் யாழை சேர்ந்த ,மாணவி பரிதாப மரணம்!

திருகோணமலையில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற கார் விபத்தில் சிக்கி சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (23-05-2024) அதிகாலை வேளையில் ஈச்சிலம்பற்று, வட்டவன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் 6 வயதுடைய நிதர்சன் ஆதித்யா எனும் சிறுமி உயிரிழந்துள்ள நிலையில் அவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

மேலும், அந்த விபத்தில் சிறுமியின் சகோதரனான 4 வயதுடைய நிதர்சன் அதிரேஸ் எனும் சிறுவன் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த சிறுவன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறையைச் சேர்ந்த கணவன், மனைவி இருவரும் இரண்டு பிள்ளைகளுடன் மட்டக்களப்பு நோக்கி பயணிக்கையிலேயே, குறித்த கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இருப்பினும் கணவன், மனைவி இருவரும் காயங்களின்றி உயிர் தப்பியுள்ளனர்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.