போதைப்பொருளுக்கு எதிரான கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு .ஆரோக்கியமான வாழ்வினை கட்டியெழுப்பும் வகையில் நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

போதைக்கும் புகைத்தலுக்கும் முற்றுப்புள்ளி வைப்போம், வலுவான தேசம் ஓன்றினை நிதமும் கட்டியெழுப்புவோம் எனும் தொனிப் பொருளில் போதைப் பொருளுக்கு எதிரான கவனயீர்ப்பு பேரணியொன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பேரணியானது நல்லூர் பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.

இதன்போது மகிழ்ச்சியான குடும்பத்திற்கு புகைத்தலே முதல் எதிரி, இளைஞர்களின் ஆண்மையை இல்லாது செய்யும் புகைக்தல் எதற்கு, புகைத்தலை கைவிடு உனது வாழ்வில் மகிழ்ச்சி இருமடங்காகும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு கோசங்களை எழுப்பி பேரணியாக சென்றுள்ளனர்.

இந்த பேரணியில் சமுர்த்தி அதிகாரிகள், நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்திப் பயனாளிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு
மகளிர்,சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சும் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும் மண்முனை வடக்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து நடாத்திய விழிப்புணர்வு மரதன் ஓட்ட நிகழ்வு இன்று காலை நடைபெற்றுள்ளது.

இதன்போது இளைஞர்கள் மத்தியில் புகைத்தல் மற்றும் மது ஒழிப்பினை விழிப்பூட்டும் வகையில் மரதன் ஓட்டப்போட்டியில் பங்கு கொண்டவர்களுக்கு போதையிலிருந்து இளைஞர்களை பாதுகாப்போம் என்னும் ஸ்டிக்கர்கள் மாவட்ட அரசாங்க அதிபரால் ஒட்டப்பட்டது.

இதனை தொடர்ந்து மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஈஸ்பரனின் ஒழுங்கமைப்பில் மரதன் ஓட்ட நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபரினால் கொடியசைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார்
சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மரதனோட்டப்போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது

குறித்த போட்டியானது இன்று (31) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் மன்னார் பிரதேச செயலாளர் ம.பிரதீப் , உட்பட பிரதம உள்ளக கணக்காய்வாளர், திட்டமிடல் பணிப்பாளர் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ,சமுர்த்தி திணைக்கள முகாமையாளர், சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சி
தேசிய போதை எதிர்ப்பு வாரத்தினை முன்னிட்டு கிளிநொச்சி சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் மரதன் ஓட்ட நிகழ்வும் கொடி தின அங்குரார்ப்பண வைபவமும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பதில் பணிப்பாளர் அ.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்.முரளீதரன் கலந்து கொண்டார்.

மேலும் கொடிவார அங்குரார்ப்பண நிகழ்வும் மரதன் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.