யாழில் கூரிய ஆயுதங்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது!

யாழ். சுன்னாகம் ஈவினைப் பகுதியில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான கூரிய ஆயுதங்களுடன் சந்தேக நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணப் பிராந்திய விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரே இன்று(07.06.2024) குறித்த ஆயுதங்களை மீட்டதுடன் சந்தேக நபரையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுன்னாகம் ஈவினைப் பகுதியில் வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கு சொந்தமான வீட்டிலே வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது எட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன் சம்பவம் தொடர்பாக கைதான சந்தேக நபரிடம் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த நபர் பல்வேறுபட்ட வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார், இந்த விடயத்தில் வெளிநாட்டு பிரஜைக்கும் தொடர்புள்ளதா அல்லது வேறு நபர்களுக்கு தொடர்புள்ளதா என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.