நாட்டில் தொற்றா நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் வருடாந்தம் 89 வீதமான மரணங்களுக்கு தொற்றா நோய்களே பிரதான காரணம் என சுகாதார அமைச்சு (Ministry of Health) தகவல் வெளியிட்டுள்ளது.

தொற்றா நோய் காரணமான நாளாந்தம் 50 தொடக்கம் 60 வயதுக்குட்பட்டவர்களில் பத்துப் பேரில் நால்வர் அல்லது ஐவர் உயிரிழக்கின்றனர் என சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

கண்டி ரிகில்லகஸ்கட ஆரம்ப வைத்தியசாலைக்கு (Base Hospital Rikillagaskada) விசேட விஜயம் மேற்கொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

உலக வங்கியின் நிதியுதவி
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், சுகாதார சேவைக்காக எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு உலக வங்கியின் (World Bank) நிதியுதவி திட்டத்துக்கமைய சுமார் 70 பில்லியன் ரூபா வழங்கப்பட்ட உள்ளது. அதற்கமைய ஒவ்வொரு வருடமும் 14 பில்லியன் ரூபா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆரம்ப சுகாதார சேவையை மேலும் வலுப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தொற்றா நோய் காரணமான நாளாந்தம் 50 தொடக்கம் 60 வயதுக்குட்பட்டவர்களில் பத்துப் பேரில் நால்வர் அல்லது ஐவர் உயிரிழக்கின்றனர்.

ஆகையால் தேசிய நிறுவனங்களுடன் இணைந்து இதய நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக இதய இடையீட்டு ஆய்வகத்தை நிறுவ எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மில்லியன் உயிரிழப்புகள்
இலங்கையில் வருடாந்தம் சுமார் 60 ஆயிரம் புதிய நோயாளர்கள் இனம்கானப்படுவதுடன் 4000 உயிரிழப்புகளும் சம்பவிக்கின்றன. அத்தோடு ஆண்டுதோரும் விபத்துக்கள் காரணமாக 6 ஆயிரம் மரணங்கள், மற்றும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் அங்கவீனர்களாகியுள்ளனர்.

நாட்டில் 89 விதமான மரணங்கள் தொற்றா நோய் காரணமாக ஏற்படுகின்றன. உலகளவில் வருடாந்தம் தொற்றா நோய் காரணமாக 41 மில்லியன் உயிரிழப்புகள் பதிவாகுகின்றன.

அவர்களுள் 17.2 வீதமானோர் இதய நோயால் உயிரிழப்பதாகவும் தெரியவந்துள்ளது. ஆகையால் இவை தொடர்பில் ஆரம்ப சுகாதார சேவை மூலம் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது என சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.