யாழ் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கடற்தொழில் அமைச்சரும் – மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா விஜயம் செய்து வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா இராம்நாதனுடன் வைத்தியசாலை நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் இன்று சனிக்கிழமை (06) விஜயம் செய்துள்ளதுடன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் கடந்த இரு தினங்களாக வைத்திய சேவைகளை புறக்கணித்து வரும் நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

சில வைத்தியர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு
இதன்போது வைத்தியசாலையை மேம்படுத்த தன்னால் எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளின் போது ஒரு சில வைத்தியர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே இந்த இக்கட்டு நிலைமைக்கு கொண்டு சென்றிருப்பதாக வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

வைத்தியர்களின் பணிப் புறக்கணிப்புக் காரணமாக கடந்த 24மணித்தியாளங்களாக தனி ஒரு வைத்தியராக நின்று வைத்தியசாலையை இயங்க வைத்து நோயாளர்களை காப்பாற்றி வருவதாகவும் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்திருந்தார்.

இதனைவிட வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவு மற்றும் சத்திரசிகிச்சைக் கூடம் ஆகியவற்றை இயங்க வைக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் -ஆளணி காணப்படுவதாகவும் அமைச்சரின் கவனத்திற்கு வைத்திய அத்தியட்சகர் கொண்டு சென்றிருந்தார் .

இதன்போது வைத்தியசாலையில் கூடிய பொதுமக்கள் வைத்தியசாலை இன்று இரவுக்குள் வழமை போன்று இயங்க வேண்டும் இல்லையேல் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா அவர்களுக்கு ஆதரவளித்தும் – வைத்தியசாலையை இயக்கக் கோரியும் மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் எனவும் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.