சீனாவில் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வைரஸ் கண்டுபிடிப்பு

சீனாவில் உள்ள திபெத்திய பனிப்பாறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வைரஸ்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

ஓஹியோ மாகாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் பனிப்பாறைகள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தனர். கடந்த 2015ஆம் ஆண்டு மேற்கு சீனப் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 22 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள பனிப்பாறையின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வந்தன.

இந் நிலையில் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்ட 2 பனிப்பாறைகளில் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வைரஸ்கள் இருந்தது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. பனிப்பாறைக்குள் நீண்ட காலமாக இருந்ததால் வைரஸ்கள் அழியாமல் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

தொடர்ச்சியாக அதிகரித்து வந்த பனி அடுக்குகளில் தூசுக்கள், வாயுக்கள் மற்றும் வைரஸ்கள் புதைந்திருந்ததாக ஆராய்ச்சி குழுவின் தலைமை விஞ்ஞானியும், நுண்ணுயிரியியல் பேராசிரியருமான ஜி பிங் ஜாங் தெரிவித்துள்ளார்.

கண்டறியப்பட்ட வைரஸ்களில் 33 வைரஸ்களுக்கான மரபணு குறியீடுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 4 ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனிப்பாறைகளில் புதைந்துள்ள வைரஸ்கள் கண்டறியப்பட்டதன் மூலம் வைரஸ்களின் பரிணாம மாற்றம் குறித்து அறிந்துகொள்ள முடியும் என ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் வைரஸ்கள் சூழலியலின் முக்கிய உயிரியாக இருப்பதால் முந்தைய காலத்தில் நிலவிய சூழலியல் நிலைகள் குறித்த ஆய்வுக்கு உதவியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.