காதலிக்க மறுத்த 16 வயது சிறுமி: விஷ பாட்டிலை வைத்து மிரட்டிய காதலன்

கடலூர் மாவட்டத்தில் சின்ன பேட்டையில் வசித்து வந்தவர் பாண்டியன். இந்த இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக சொல்லி தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

தொந்தரவு தாங்க கொடுக்காமல் சிறுமி பெற்றோரிடம் சொல்ல , அவர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் பாண்டியன். இதன் பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

ஜாமீனில் வெளியே வந்த பின்னரும் சிறுமியிடம் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். காதலிக்கவில்லை என்று எத்தனையோ முறை சொல்லியும், தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த பாண்டியன், சம்பவம் நடந்த அன்று காதலிக்க மறுத்து விட்டால் நான் விஷம் குடித்து இறந்து விடுவேன் என்று கூறியிருக்கிறார். அதற்கு சிறுமி மௌனமாக இருக்கவும், இல்லை நீ என்னை காதலித்தே ஆகவேண்டும். அப்படி இல்லை என்றால் நீ விஷம் குடித்து இறந்து போய்விடு என்று விஷத்தை நீட்டியிருக்கிறார்.

பாண்டியனின் தொல்லை பொறுக்காமல் மன உளைச்சலில் இருந்த சிறுமி, திடீரென்று அந்த விஷத்தை வாங்கி கடகடவென்று குடித்துவிட்டார். கடந்த 2ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதையடுத்து சிறுமியை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் பாண்டியனை போலீசார் தேடி வந்தனர்.

தீவிர தேடுதல் வேட்டையில் பிடிபட்ட பாண்டியனை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.