யாழ்.நகரில் வெள்ளத்தில் மிதக்கும் கழிவு எண்ணெய்!

யாழ்.நகரில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றினால் தமது பகுதியில் மழை வெள்ளத்துடன் கழிவு எண்ணெய் மிதப்பதாகவும் நிலத்தடி நீர் மாசடையும் ஆபத்து உருவாகியிருப்பதாகவும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

இந்நிலை காரணமாக எதிர் வரும் காலப்பகுதியில் எமது பிரதேச நிலத்தடி நீர் குடிப்பதற்கு ஒவ்வாத நிலைமைக்கு தள்ளப்படும் அபாயம் உருவாகியுள்ளது. மழை காலங்களில் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தால் இந்த வாகன திருத்தகத்திலிருந்து கலந்து வெளியேறும் பெருமளவு கழிவு எண்ணெய் அப்பிரதேசத்தில் கறுப்பு வெள்ளமாக பல பகுதிகளுக்கும் பரவியும் சென்று நிலங்களை மாசுபடுத்துவதுடன் நிலத்தடி நீரிலும் கலந்துவிடுகிறது.

இது தொடர்பாக பொறுப்புவாய்ந்த அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் இதுவரை எவ்வித பலனும் கிடைக்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய விடயமென அப் பிரதேச மக்கள் ஆழ்ந்த கவலையும் கடும் விசனமும் தெரிவிக்கின்றனர்.

இப்பிரச்சினை வெறுமனே அயல்வீடுகளை மட்டும் பாதிக்காது என கூறியுள்ள பிரதேச மக்கள் இது நிலத்தடி நீரூற்று சார்ந்த விடயம் எனவும் கராஜிலிருந்து 50 மீற்றருக்கு உட்பட்ட தொலைவில் யாழ். இந்து ஆரம்பபாடசாலை உள்ளது. மேலும் அருகில் யாழ் இந்துக் கல்லூரியும் உள்ளது என குறிப்பிடுகின்றனர்.