பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை தொடர்பில் தற்போது வெளியான அறிவிப்பு….!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் வழமை நிலைக்கு கொண்டு வரப்படவுள்ளன.

இதன்படி, தரம் ஒன்று முதல் 13 வரையில் கல்வி நடவடிக்கைகள் சாதாரண நடைமுறைகளுக்கு அமைய முன்னெடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கோவிட் பரவல் அதிகரித்து வந்தநிலையில், பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. இதனையடுத்து, சில கட்டுப்பாடுகளுடன் பாடசாலைகள் மீள திறக்கப்பட்டிருந்தன.

அத்துடன், பாடசாலையின் ஒவ்வொரு வகுப்பறைகளிலும் உள்ள மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதற்கிடையில், ஒரு வகுப்பறையில் இருக்கக்கூடிய மாணவர்களின் அளவும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இதனால், பெருமளவான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன. எனவே, பல பாடசாலைகள் குழு முறைமைக்கமையவே கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன. எனினும், புதிய நடைமுறைக்கமைய விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.