தங்கம் வென்ற தமிழ் யுவதியை தேடிச் சென்ற அரசியல் முக்கியஸ்தர்கள்…!

பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் தங்கம் வென்ற முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவியின் வீட்டிற்கு விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் வடமாகாண இணைப்பாளர் சென்றுள்ளார்.

அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ஆகியோர் நேற்று நேரடியாக சென்று சந்தித்துள்ளனர். இதன்போது , தங்கம் வென்ற தமிழ் மங்கை இந்துகாதேவியின் தேவைகள் குறித்தும் அவர்கள் கேட்டறிந்து கொண்டுள்ளார்கள்.

கடந்த 18 அன்று பாக்கிஸ்தானில் நடைபெற்ற 2வது சவேட் குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் 25 வயதுக்குட்பட்ட 50-55 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்டு முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவி தங்கப்பதக்கத்தினை பெற்றுள்ளார்.

விளையாட்டுத் துறை அமைச்சின் வடமாகாண திட்ட முகாமையாளர் ஹமினி கொஸ்தா யுவதியின் வீட்டிற்கு சென்று யுவதியின் குடும்ப நிலை தொடர்பில் விசாரித்துள்ளதுடன் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.

 மேலும் அவருக்கான உதவிகளை வழங்க விளையாட்டுத்துறை அமைச்சு முன்வந்துள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாகவும் இந்துகாதேவியின் தேவைகளை பூர்த்தி செய்யவுள்ளதாகவும் அவர்கள் இதன்போது உறுதியளித்துள்ளனர்.