யாழில் பாடசாலை மாணவி துன்புறுத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியைக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலையொன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவியை அடித்துத் துன்புறுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவரை பிணையில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த பாடசாலையில் கல்வி கற்று வரும் 7 வயது மாணவியை அடித்து துன்புறுத்தியமை தொடர்பிலேயே ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமி கடந்த 10ஆம் திகதி அடித்துத் துன்புறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளாகிய மாணவிக்கு உளநல மருத்துவ வல்லுநரினால் உளநல சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

மாணவியின் குடும்பத்துக்கு பண உதவியை வழங்கி இணக்கமாக முடிக்க பாடசாலை நிர்வாகம் முயற்சித்துள்ளது.

இந்த நிலையிலேயே மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் ஆசிரியை நேற்று மாலை மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

எனினும் ஆசிரியையை எதிர்வரும் 19ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.