யாழில் தனியார் வகுப்பிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியின் சங்கிலியை அறுத்த இராணுவ சிப்பாய்! தரமாக கவனித்த ஊரவர்கள்!

தனியார் வகுப்புக்கு சென்று வீடு திரும்பிய மாணவியின் சங்கிலியை அறுத்த இராணுவ சிவில் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றுபவர் ஒருரை ஊர் பொதுமக்கள் நன்றாக கவனித்து அந்நபரை மடக்கிபிடித்துள்ளனர்.

மடக்கிபிடித்த நபரை இராணுவத்தினர் அழைத்துச் செல்ல முற்பட்டதால் பதற்றமான சூழல் உருவானதை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து சந்தேக நபரை அழைத்துச் சென்றனர்.

யாழ்ப்பாணம், பலாலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வள்ளுவர்புரம் பகுதியில் இன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனியார் வகுப்புக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமியை மோட்டார் சைக்கிளில் வந்த அந்நபர் ஒருவர் துரத்திச் சென்று சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடிவிட்டார்.

இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த சிறுமி படுகாயம் அடைந்தார். இதனை அவதானித்த கிராம மக்கள் ஒன்று திரண்டு சந்தேக நபரை துரத்திச் சென்று பிடித்து சிறுமியை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மடக்கப்பிடிக்கப்பட்ட நபரிடம் கிராம மக்கள் விசாரணை நடத்திய போது, ​​குறித்த நபர் காங்கேசன்துறை கொல்லங்கலட்டி பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் இராணுவ சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணிபுரிபவர் எனவும் தெரியவந்துள்ளது.

இதன் பின்னர் சம்பவம் தொடர்பில் பலாலி பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து பொலிஸாருக்கு முன்னர் இராணுவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குறித்த நபரை மீட்டு தம்முடன் அழைத்துச் செல்ல முயற்சித்தனர்.

இதன்போது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த இடத்தில் பதற்றம் ஏற்பட்டது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பலாலி பொலிஸார் குறித்த நபரை கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.