யாழில் வாகன உரிமையாளர்கள் மற்றும் மக்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவுறுத்தல் !

இரண்டு மூன்று நாட்களுக்கு வாகனங்களை வாடகைக்கு எடுத்து அந்த வாகனங்களை அடகு வைக்கும் சம்பவங்கள் யாழ் குடா நாட்டில் அண்மைய நாட்களாக அதிகரித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் – சுன்னாகம் மற்றும் மானிப்பாய் பொலிஸ் பிரிவுகளில் இவ்வாறான பதினைந்துக்கும் மேற்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், இதுவரையில் நான்கிற்கும் மேற்பட்ட முறைப்பாடுகளே பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நெல்லியடி பகுதியில் நான்கு நாட்கள் வாடகைக்கு எடுக்கப்பட்ட வாகனத்தை 20 இலட்சம் ரூபாவிற்கு அடகு வைத்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவ்விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்குமாறு உரிமையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.