யாழில் ஹெல்மெட் கழன்று விழுந்ததால் ஏற்பட்ட விபத்து! ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!!

வெற்றிலைக்கேணியில் இன்று நடந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிகக்கப்பட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த மருதங்கேணி பிரதேச செயலக ஊழியர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வெற்றிலைக்கேணி அந்தோனியார் தேவாலயத்தின் முன்பாக இந்த விபத்து நடந்தது.

மருதங்கேணி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் ஆழியவளையை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர், ஆசிரியையான தனது மனைவியை வெற்றிலைக்கேணியிலுள்ள பாடசாலையொன்றில் இறக்கி விட்டு ஆழியவளைக்கு திரும்பி வந்துள்ளார்.

இதன்போது, அவர் அணிந்திருந்த ஹெல்மெட்டின் பட்டி இணைக்கப்பட்டிருக்கவில்லையென்றும், ஹெல்மெட் கழன்று விழுந்ததை தொடர்ந்து விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கடற்கரையிலிருந்து பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரும், பிரதேச செயலக உத்தியோகத்தரும் மோதி விபத்திற்குள்ளாகினர்.

ஆபத்தான நிலையிலிருந்த பிரதேச செயலக உத்தியோகத்தர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார். உடனடியாக மேலதிக சிகிச்சைக்கான யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

காயமடைந்த மற்றையவரும் அங்கிருந்தவர்களால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.