யாழில் பொது மக்களை கொடூரமாக தாக்கி துன்புறுத்திய நபர்! அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை !

யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்துத் தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய நபரை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீட்டர் வட்டிக்கு பணம் பெற்ற இருவரை தோட்டத்திற்கு அழைத்து வந்து கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த காணொளி வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து தகவல் அறிந்தவர்கள், வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்திலோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ தகவல்களை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் பொலிஸாருக்கு தொடர்பு உள்ளதா என விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.