யாழில் மீற்றர் வட்டிக்காரர்கள் அடித்து பணம் வசூலிக்கும் அதிர்ச்சி வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகின: சுன்னாகத்தை சேர்ந்த கும்பல் அடையாளம் காணப்பட்டது!

யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்கள், கடத்தல் மற்றும் சித்திரவதைகளில் ஈடுபடும் அதிர்ச்சி காணொளிகள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவங்கள் சுன்னாகம், மயிலங்காடு பகுதியில் நடப்பது தெரிய வந்துள்ளது.

மீற்றர் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள், பணத்தை குறிப்பிட்ட திகதியில் தராவிட்டால், பணம் வாங்கியவரை கடத்திச் சென்று, சித்திரவதை செய்யும் அதிர்ச்சி சம்பவங்களும் வெளியாகியுள்ளன.

நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் பரவிய இரண்டு காணொளிகளில், ஒரே குழுவினால் இரண்டு வெவ்வேறு நபர்கள் அடித்து சித்திரவதைப்படுத்தப்படுவது பதிவாகியிருந்தது.

அவர்கள் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கியிருப்பதும், குறிப்பிட்ட நாளில் பணத்தை திருப்பி கொடுக்காததால், கடத்திச் செல்லப்பட்டு, தாக்கப்படுவதும் காணொளி உரையாடலில் இருந்து தெரிய வருகிறது.

இரண்டு காணொளிகளிலும் பதிவாகியுள்ள குற்றவாளிகளை கண்டறியும் பணியில் பொலிசார் ஈடுபட்டு, தற்போது, குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுன்னாகம் மற்றும் மயிலங்காடு பகுதியை சேர்ந்த குற்றக்கும்பல் ஒன்றே இந்த அடாவடியில் ஈடுபட்டுள்ளது. காணொளியில் பதிவாகியுள்ள இரண்டு தாக்குதலாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கும்பலில் இருப்பவர்களின் பெயர்கள் காணொளியிலேயே பதிவாகியுள்ளது. ரவி, ஜெகன், பாண்டி, சிறியென இயங்கும் இந்த நபர்கள், யாழ் மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுப்பதும், பணத்தை வசூலிக்க கடத்திச் சென்று சித்திரவதைப்படுத்துவதையும் வாடிக்கையாக கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த கும்பலை சேர்ந்த ஒருவரின் வீட்டினருகில் உள்ள வாழைத்தோட்டம் அல்லது மயிலங்காடு மயானத்திற்கு ஆட்களை கடத்திச் சென்று அடித்து சித்திரவதைப்படுத்தி பணத்தை வசூலித்து வந்துள்ளனர்.

நீண்டகாலமாக நடக்கும் இந்த குற்றச்செயல் தொடர்பான காணொளிகள் தற்போது வெளியாகியுள்ளன.

சம்பவத்துடன் தொடர்புடைய குற்றக்கும்பலை உடனடியாக கைது செய்யுமாறு பொலிஸ் உயர்மட்டத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இதேவேளை, யாழ்ப்பாணத்திலுள்ள வாள்வெட்டு குழு உறுப்பினர்கள் பலர் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுப்பதும், பணத்தை அறவிட, இதே போல கடத்திச் சென்று தாக்குவது அல்லது வாளை காட்டி மிரட்டுவது, வாளால் வெட்டுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் விடயமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

யாழில் உள்ள பிரதான வாள்வெட்டு குழு உறுப்பினர்கள் அனைவரும் மீற்றர் வட்டி தொழிலில் ஈடுவதும் தெரிய வந்துள்ளது.