யாழில் பீஸா ஹட் நிறுவனத்திற்கு அனுமதி மறுப்பு ! வெளியான முழு விபரம் !

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பல்தேசிய நிறுவனம் ஒன்றின் உணவகத்திற்கு அனுமதி மறுக்கப்பட வேண்டும் என நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேற்படி உணவகத்திற்கு சில சமய அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், கட்டிட நிர்மாண சான்றிதழ் மற்றும் வியாபார அனுமதிப்பத்திரம் கிடைக்கப்பெறாத காரணத்தினால், 17/01/2023 அன்று நல்லூர் பிரதேச சபையின் அமர்வில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அதன் பிரகாரம் நல்லூர் பிரதேச சபை தவிசாளரின் 20/01/2023 கடிதத்தின் பிரகாரம் குறித்த உணவகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த உணவகத்திற்கான அனுமதி தொடர்பில் ஆராயும் கூட்டம் இன்று நல்லூர் பிரதேச சபையில் தவிசாளர் பொ.மயூரன் தலைமையில் இடம்பெற்றது.

இதேவேளை, உணவகத்திற்கு 10 மீற்றர் தொலைவில் சைவ ஆலயம் உள்ளதால், உணவகத்திற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.