ஒன்றாக வாழ்ந்த பெண்ணை கொன்று குளிர்சாதன பெட்டிக்குள் வைத்துவிட்டு, நிச்சயதார்த்தம் செய்த பெண்ணை திருமணம் செய்த இளைஞன்!

தலைநகர் டெல்லியில் தனது லிவ் இன் பார்ட்னரை கொலை செய்து அவரை தனக்குச் சொந்தமான உணவகத்தின் குளிர்சாதனப் பெட்டியில் இளைஞர் ஒருவர் பதுக்கிவைத்திருந்த சம்பவம் அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து அந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

டெல்லியை அடுத்த மித்ரோன் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷாஹில் கெலாட். இவருக்கு வயது 24. இவருக்கும் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த நிக்கிய யாதவ் (22) என்பவருக்கும் உறவு இருந்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இவர்கள் இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.

இருவரும் டெல்லி உத்தம் நகரில் போட்டித் தேர்வுகளுக்கான மையத்தில் பயிலும்போது அறிமுகமாகியுள்ளனர். நெருக்கம் ஏற்பட்ட பின்னர் இருவரும் கிரேட்டர் நொய்டா பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு வந்துவிட இருவரும் தத்தம் ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். பின்னர் மீண்டும் இயல்பு திரும்ப துவாரகா நகரில் ஒரு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.

இந்நிலையில் அண்மையில் ஷாஹிலுக்கு வேறு ஒரு இடத்தில் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இது நிக்கி யாதவுக்கு தெரியவர அவர் ஷாஹிலுடன் சண்டையிட்டுள்ளார்.

இந்நிலையில் ஷாஹில் கடந்த 10 ஆம் திகதி நிக்கியை மொபைல் போன் டேடா கேபிளைக் கொண்டு கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார்.

பின்னர் நிகியின் உடலை புறநகர்ப் பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான தாபாவுக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். அங்கிருந்த மிகப் பெரிய ஃப்ரீஸரில் நிக்கியின் உடலை மறைத்துவைத்துவிட்டு ஊருக்குச் சென்று தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

தாபாவின் ஃப்ரீஸரில் பெண்ணின் சடலம் இருப்பது குறித்த புகார் வரவே போலீஸார் ஷாஹில் கெலாட்டை கைது செய்துள்ளனர்.