யாழில் பிரதேச சபை உறுப்பினர் மற்றும் மனைவி மீது வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் – வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் செல்வராசா மற்றும் அவரின் மனைவி ஆகியோர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் காயங்களுக்கு உள்ளான இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோப்பாய் – மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு முன்பாக நேற்றிரவு 8.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிரதேச சபை உறுப்பினரும் அவரது மனைவியும் ஆலய திருவிழா ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அவர்களை பின்தொடர்ந்த மூவர் அவர்களின் வீட்டிற்கு முன்பாக வழிமறித்து மனைவி அணிந்திருந்த தங்க நகைகளை அறுக்க முற்பட்டுள்ளனர்.

இதன்போது பிரதேசசபை உறுப்பினரும் மனைவியும் நகைகளை அறுப்பதை தடுக்க முற்பட்ட பொழுது அவர்கள் இருவர் மீதும் வாளால் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதையடுத்து காயமடைந்த இருவரையும் அயலவர்கள் மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.