வடிகானுக்கு கீழிருந்து இளம் யுவதியின் சடலம் மீட்பு: கொலைக்கு முன் பாலியல் பலாத்காரம்?

இரத்தினபுரி பகுதியில் இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

எலபத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிரியெல்ல பிரதேசத்தில் உள்ள வடிகானுக்கு அடியில் கொலை செய்யப்பட்ட நிலையில் யுவதியின் சடலம் மீட்கப்பட்டது.

இன்று (27) பிற்பகல் இந்த சம்பவம் நடந்தது.

இன்று காலை 6.30 மணியளவில் குறித்த யுவதி தனது பணியிடத்திற்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

பின்னர், அவரது தொலைபேசி வேலை செய்யாததால், ​மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது வீட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள வடிகான் ஒன்றின் கீழ் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

சுவினி தினதாரி ஜெயசிங்க (25) என்ற யுவதியின் சடலமே மீட்கப்பட்டது.

அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கலாமென்றும் சந்தேகிக்கப்படுகிறது.

குறித்த யுவதி ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் படித்து சில மாதங்களுக்கு முன்பு பட்டம் பெற்றார்.

இக்கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.