திடீரென பற்றி எரிந்த முச்சக்கரவண்டி

இரத்தினபுரி கஹவத்தை பிரதேசத்தில் மத்திய எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

இச்சம்பவம் நேற்றைய தினம் (30-03-2023) மதியம் இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டியில் திடீரென ஏற்பட்ட தீயினால் கஹவத்தை பிரதான வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டதோடு பதற்ற நிலைமை நிலவியது.

பிரதேசவாசிகள் வியாபாரிகள் ஒன்றிணைந்து அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு தீ பரவாமல் இருக்க மேற்கொண்ட கடும் முயற்சிகளின் பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. முச்சக்கர வண்டி முற்றாக தீக்கிரையானது. 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.