மாணவி மற்றும் மாணவனை கொடூரமாக தாக்கிய பிக்கு!

மேலதிக வகுப்பு இடம்பெறாமையால் வெலிகம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றுக்கு சென்ற பாடசாலை மாணவன் மற்றும் மாணவியையும் அந்த விகாரையின் விகாராதிபதி, கொடூரமாக தாக்கியதாக குறித்த மாணவனின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதன் காரணமாக இந்த ஆண்டு சாதாரண தர பரீட்சையில் அந்த மாணவரால் தோற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய பிக்கு கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவ்வருடம் சாதாரண பரீட்சைக்குத் தோற்றவிருந்த வெலிகம பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர், கடந்த 25 ஆம் திகதி பரீட்சை அனுமதி சீட்டில் கையொப்பமிடவுள்ளதாக கூறிவிட்டு வீட்டை விட்டுச் சென்றுள்ளார்.

பின்னர் மேலதிக வகுப்பிலும் பங்கேற்கவுள்ளதாகவும் அந்த மாணவன் கூறிச் சென்றுள்ளான்.

ஆனால் மேலதிக வகுப்பு நடைபெறாததால், தனது தோழியுடன் அப்பகுதியில் உள்ள விகாரைக்கு சென்றுள்ளார்.

அங்கு குறித்த விகாரையின் விகாராதிபதி மாணவனையும் அவருடன் சென்ற தோழியையும் ஈர்க்குமாறால்  தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்கப்பட்ட மாணவி கூறும் போது,

“இருவரும் விகாரைக்கு சென்றோம். அப்போது அங்கு வந்த தேரர் ஈர்க்குமாரை எடுத்து நண்பரை தாக்கினார். அவர் ஓடினார், நானும் ஓடினேன்.  ஏன் தாக்கினீர்கள் என்று கேட்டோம். நாங்கள் தவறாக நடந்து கொள்ளவில்லை, பின்னர் என்னையும் அழைத்து தாக்கினார் என்றார்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவன் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்கப்பட்ட மாணவனின் தந்தை கூறுகையில்,

“இந்த தாக்குதலால் மகனின் உடலின் உள்பகுதி சேதமடைந்துள்ளது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று வைத்தியர்கள் கூறினர். அறுவை சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். மகனுக்கு அடித்ததால் ஏற்பட்ட ரத்தக்காயம் இருப்பதாக மனைவி என்னிடம் கூறினார். இது வீழ்ந்ததால் ஏற்பட்ட காயம் அல்ல தாக்கியதால் ஏற்பட்ட காயம் என மருத்துவர்களும் கூறினர்.

பின்னர், இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்தேன்.
அதன் பிறகு வெலிகம பொலிஸாருடன் விகாரைக்கு சென்றோம் அங்கு தேரர் இல்லை.

மகனுக்கு  இன்னும் சாப்பிடவும் குடிக்கவும் முடியவில்லை.. 6ம் திகதி பரீட்சை. அதுக்கு செல்லவும் தற்போது வழியில்லை. உடம்பு சரியில்லாம படுத்த படுக்கையா இருக்கிறான். மகன் தோழியுடன் சென்றமை குறித்து எங்களுக்கு அறிவித்திருக்கலாம், அதனை விடுத்து இவ்வாறு கொடூரமாக தாக்குவது முறையல்ல. எனது மகனுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் தேரருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என்றார்.