வாகன இறக்குமதிக்கு விசேட அனுமதி வழங்கிய அமைச்சரவை

   வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் முழுமையாக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டத்தை நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, உரிமம் வழங்கும் திட்டம் செப்டம்பர் 23, 2023 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் மூலம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பெரும் சலுகை கிடைத்துள்ளதாக அமைச்சரவை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இலங்கைக்கு அனுப்பப்பட்ட அந்நியச் செலாவணி

அதேவேளை வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் தமது வருமானத்தை சட்டப்பூர்வமாக இலங்கைக்கு அனுப்பியிருந்தால் முழுமையாக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்டது. 

  இதன்படி, மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு, 01.05.2022 முதல் 31.12.2022 வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட அந்நியச் செலாவணியின் அளவை அடிப்படையாகக் கொண்டு, விரும்பிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.