கட்டுமாணத்துறை மூலப் பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை!

கட்டுமானத்துறையில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. 

மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் விலைகளைக் குறைப்பதற்கு இணங்கியுள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் A.M.P.M.B.அத்தபத்து கூறியுள்ளார். 

கட்டுமானத்துறை மூலப்பொருள் இறக்குமதியாளர்களும் உற்பத்தியாளர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அமைச்சுக்கு வரவழைக்கப்பட்டு இந்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்தமை, எரிபொருள் விலை குறைவடைந்தமை, வங்கி வட்டி வீதங்கள் குறைவடைந்தமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் மூலப்பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கான இயலுமை காணப்படுவதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது ஸ்தம்பிதமடைந்துள்ள கட்டுமானத்துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கு மூலப்பொருட்களின் விலைகளைக் குறைப்பது மிகவும் முக்கியமானது எனவும் அவர் கூறினார்.

இந்தக் கலந்துரையாடல்களில் சீமெந்து, இரும்பு, டைல்ஸ், வயர் மற்றும் மின் உபகரண இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் A.M.P.M.B.அத்தபத்து தெரிவித்துள்ளார்.

உற்பத்திகளின் விலைகளைக் குறைப்பதற்கு சில நிறுவனங்கள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.