யாழ் நெடுந்தீவு குமுதினி படகுச் சேவை மீண்டும் ஆரம்பம்!

  யாழ்ப்பாணம் , நெடுந்தீவு – குமுதினி படகு திருத்த பணிகள் நிறைவடைந்து மீண்டும் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறிக்காட்டுவான் நெடுந்தீவு கடல்வழிப் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட குமுதினி படகு அடிக்கடி கோளாறு ஏற்பட்ட நிலையில் குறிக்காட்டுவானிலிருந்து வல்வெட்டித் துறை ரேவடி கடற்கரைக்கு திருத்த வேலைகளுக்காக கொண்டு செல்லப்பட்டது.

பல ஆண்டுகால சேவை

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் சுமார் எழுபது இலட்சம் ரூபாய்க்கு அதிகமான நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த படகு புனரமைக்கப்பட்ட நிலையில் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளது.

படகை கடலுக்குள் இறக்குவதற்காக நேற்று( 20) செவ்வாய்க்கிழமை மதியம் பொங்கல் பொங்கி வழிபாடு இடம்பெற்றதுடன் சம்பிரதாய பூர்வ நடவடிக்கைகளின் பின்னர் படகு கடலுக்குள் இறக்கப்ப்டடது.

வல்வெட்டித்துறை ரேவடி கடலில் இரு நாட்கள் கடலில் தரித்து அனைத்து தொழில்நுட்ப வேலைகளும் சரியா என ஆராய்ந்த பின்னர் குறிக்கட்டுவான் நோக்கி பயணமாகவுள்ளது.