யாழ்சாவகச்சேரி மக்களுக்கு சோழர் காலத்து தீர்த்த கிணற்றில் இருந்து நீர் வழங்க ஏற்பாடு!

யாழ்.சாவகச்சேரி மக்களுக்கு சோழர் காலத்து தீர்த்த கிணற்றில் இருந்து குடிநீரை வழங்க தொல்லியல் திணைக்களத்தினர் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள சுத்தமான தண்ணீர் கிணற்றை சுத்திகரித்து பிரதேச மக்களுக்கும் பயணிகளுக்கும் குடிநீர் வழங்குவது தொடர்பாக, சம்மந்தப்பட்ட தொல்லியல் திணைக்கள அதிகாரிகளை அழைத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டுள்ளார்.

தொல்லியல் திணைக்களத்தினர் இணக்கம்

இந்நிலையில் குறித்த கிணறு சோழர்களினால் அமைக்கப்பட்ட சிவன் கோயிலின் மூலஸ்தானத்திற்கான தீர்த்தக் கிணறு என்பது ஆய்வு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொல்லியல் திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமைச்சருடனான சந்திப்பின் போது, குறித்த கிணற்றின் கட்டுமானங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல், பொதுமக்களுக்கு குடிநீரை வழங்க தொல்லியல் திணைக்களத்தினர் இணக்கம் வெளியிட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.