யாழில் குடும்ப பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

யாழ்ப்பாணம் அளவெட்டியில் தீக் காயங்களினால் குடும்பப் பெண் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அளவெட்டியைச் சேர்ந்த ரெஜி நிசாந்தன் நிசாநந்தினி (வயது 43) என்ற 2 பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்தார். குறித்த சம்பவம் கடந்த 13ஆம் திகதி எரிகாயங்களுடன் அவர் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதற்கமைய மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எனினும் சிகிச்சை பயனின்றி அவர் நேற்றிரவு உயிரிழந்தார்.

இந்நிலையில் “உயிரிழந்த பெண்ணின் கணவருடன் நெருக்கமான இளைஞர் ஒருவர் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அந்த இளைஞர் போதைக்கு அடிமையாகியவர்.

போதைப்பொருள் வாங்குவதற்காக சில நாள்களாக குடும்பப்பெண்ணை அச்சுறுத்தி பணம் பெற்று வந்துள்ளார். இந்த விடயம் கணவருக்கு தெரிய வர அந்த இளைஞரை வீட்டுக்கு வரவேண்டாம் என்று கண்டித்துள்ளார்.

கடந்த 13ஆம் திகதி குடும்பப்பெண் எரிகாயங்களுடன் மீட்கப்பட்டு தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டு தீ பரவியுள்ளதாக மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டது.

எனினும் அவரை எரிகாயங்களுடன் மீட்ட இடத்தில் மண்ணெண்ணெய் போத்தலோ, கலனோ இருக்கவில்லை. அவரது எரிகாயங்களுக்கு 23 வயது இளைஞனே காரணம் என குடும்பப் பெண்ணின் உறவினர்கள் விசாரணைகளில் தெரிவித்தனர்.

அத்துடன், அயலவர்களும் அதே கருத்தையே தெரிவித்தனர்” என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. குறித்த சம்பவத்தையடுத்து உறவினர்களினால் குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர் இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

மேலும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணைகளை மேற்கொண்டார்.