இஸ்லாமிய மக்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து கூறிய கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்

இறை உணர்வோடும், தியாக சிந்தனையோடும் புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்த தியாகத்திற்கும் தயங்கமாட்டார்கள் என்பதை பறைசாற்றும் வகையில், இறைத்தூதர் இப்ராஹிம் நபி இறை கட்டளையை ஏற்று, தனது ஒரே மகனான இஸ்மாயிலை இறைவனுக்காக தியாகம் செய்ய துணிந்ததை நினைவுகூரும் வகையில் புனித ஹஜ்ஜுப் பெருநாள் இஸ்லாமிய பெருமக்களால் கொண்டாடப்படுகிறது.

இப்றாஹீம் நபி அவர்களும் அவரது குடும்ப உறுப்பினர்களும் இறைவனுக்காக மேற்கொண்ட பெரும் அர்ப்பணிப்புகளை நினைவுகூர்ந்து உலக வாழ் முஸ்லிம்கள் மிகுந்த பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் இத்திருநாளை கொண்டாடுகின்றனர்.

நபிகள் நாயகம் அளித்த போதனைகள், தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் கடைப்பிடிக்க வேண்டிய உன்னதமான நோக்கங்கள் என்பதை உணர்ந்துள்ள அவர்கள், அதன் வழி நின்று – அடி பிறழாமல் பின்பற்றி – இந்தப் புனித ஹஜ்ஜுப் பெருநாளை ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது.

இந்த திருநாளில், திருக்குரான் போதிக்கும் உயரிய நெறிமுறைகளான அன்பு, அமைதி, மனிதநேயம் ஆகியவற்றை மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி, அன்புடனும், சகோதரத்துவத்துடனும், ஒற்றுமையாக வாழ்ந்திடவேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, உலக வாழ் இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் இந்த தியாக பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிட வேண்டும் என்று வேண்டி, மீண்டும் ஒரு முறை எனது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் ஆளுநர் செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.