வடக்கு மாகாணத்தில் சுமார் 2000 பேருக்கான ஆளணிப் பற்றாக்குறை

  வடக்கு மாகாணத்தில் சுமார் 2000 பேருக்கான ஆளணிப் பற்றாக்குறை காணப்படுவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

வைத்தியசாலைகளில் மொத்தமாக 8000 பேர் அனுமதிக்கப்பட்ட ஆளணியாக இருந்தாலும் சுமார் 2000 பேருக்கான ஆளணிப் பற்றாக்குறை காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட ஆளணி பற்றாக்குறை 

வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

வடக்கில் உள்ள வைத்தியசாலைகளில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட ஆளணி பற்றாக்குறை காணப்படுகின்றது. அதிலும் குறிப்பாக ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் சுகாதார உதவியாளர்களாக காணப்படுகின்றார்கள்.

அதேபோல தாதியர்கள் மருத்துவ மாதுக்கள் என பல்வேறுபட்ட நிலைகளிலும் ஆளணிப் பற்றாக்குறை காணப்படுகின்றது.

தற்போதுள்ள நிலையில் புதிதாக உள்வாங்குவதில் தாமதம் காணப்படுகின்ற படியினால் எதிர்வரும் காலங்களில் சுகாதார அமைச்சின் ஊடாக இந்த நியமனங்கள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாகவும் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.