இலங்கையில் நடைபெறவுள்ள இந்தியா எதிர் பாகிஸ்தான் போட்டி


2023 ஆம் ஆண்டு ஆசியக் கிண்ண கிரிக்கட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கண்டி பல்லேகலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

2023 ஆசிய கோப்பையில் “ஏ” மற்றும் “பி” குழுக்களின் கீழ் 6 அணிகள் பங்கேற்கும்.

இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் குரூப் “ஏ” பிரிவிலும், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ் ஆகிய அணிகள் “பி” பிரிவிலும் போட்டியிடுகின்றன.

ஒரு குழுவிலிருந்து இரண்டு அணிகள் சுப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறுவதுடன் இறுதிப் போட்டி செப்டம்பர் மாதம்  17 ஆம் திகதி கொழும்பில் நடைபெறும்.

இந்த ஆண்டு ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரை பாகிஸ்தான் நடத்துகின்ற நிலையில் , இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக, இந்தியா பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்துவிட்டது.

எனவே ஆசிய கிரிக்கட் பேரவையின் தலையீட்டின் பேரில் தொடரின் சில போட்டிகளை இலங்கையில் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இந்தியாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள  உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான ஒத்திகையாக, ஆசியக் கிண்ண கிரிக்கட் தொடர் இடம்பெறவுள்ளது.