தமிழ் அரசியல் கைதிகள் இருவர் விடுதலை

  1996 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கி மீதான குண்டுத்தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு 200 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி உள்ளிட்ட இருவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கிய்யுள்ளார்.

செல்லையா நவரட்ணம் என்ற குறித்த அரசியல் கைதியுடன் ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த சண்முகரட்ணம் சண்முகராஜா என்ற தமிழ் அரசியல் கைதியும் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

200 வருட சிறைத்தண்டனை  

இத்தகவலை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அவர்கள் கடந்த 18 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மத்திய வங்கி மீதான குண்டுத் தாக்குதல் தொடர்பில் 200 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த செல்லையா நவரட்ணம் தனது 69 ஆவது வயதில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவருடன் விடுதலை செய்யப்பட்டுள்ள சண்முகரட்ணம் சண்முகராஜாவின் வயது 56 ஆகும். விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு பொருட்களை கொண்டு சென்ற குற்றத்திற்காக இவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

சிறைச்சாலையில் அவர்களது நன்னடத்தையை கருத்திற்கொண்டு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது.