யாழில் ஆசிரியர் தாக்குதலால் மாணவனின் முக நரம்பு பாதிப்பு!

யாழ் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் தாக்கியதில் அம் மாணவனின் முகநரம்பில் பாதிப்பு ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – வலிகாம கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றிலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் முகநரம்பில் பாதிப்பு ஏற்பட்டமையும் தெரியவந்தது.

சமரசம் செய்து அனுப்பிய பொலிஸார்

இந்நிலையில் இரு தரப்பினரையும் அழைத்த மானிப்பாய் பொலிஸார் மாணவன் பாதிக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கையை பின்பற்றாமல் சமரசம் செய்து அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் விடயம் தொடர்பில் வலிகாம வலயக் கல்விப்பணிப்பாளர் பொலிஸார் சமரசம் செய்தமையை அவர் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவன் தாக்கப்பட்டமை இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாக கூறப்பட்டாலும் பாடசாலையுடன் இணைந்து மாணவனின் பெற்றோரை சமரசம் செய்து அனுப்பியமை ஒரு தரப்பினரை காப்பாற்றும் நோக்கில் உள்ளதா என சந்தேகம் எழுகின்றது.