யாழில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் சட்டத்தரணிகள்

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றங்களின் சட்டத்தரணிகள் வெள்ளிக்கிழமை (25) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 22 ஆம் திகதியன்று முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அவதூறு பரப்பும் வகையிலும் நீதித்துறை சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்தும் வகையிலும் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை கண்டித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் இன்று வெள்ளிக்கிழமை  காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து அடையாள கண்டன போராட்டம் ஒன்றை நடத்த அழைப்பு விடுத்திருந்த்து.

இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் ஏனைய கிளைச் சங்கங்களும் தத்தமது நீதிமன்றங்களில் குறித்த அடையாள கண்டன போராட்டத்தினை மேற்கொண்டன.

இதனால் போராட்டம் இடம்பெற்ற நேரத்தில் யாழ்  மாவட்ட நீதிமன்ற செயற்பாடுகள் பாதிக்கப்பட்டது.

யாழ்ப்பாண நீதிமன்றம்

யாழ்ப்பாண நீதிமன்றம் முன்பாக ஒன்று கூடிய சட்டத்தரணிகள் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதே போன்று சாவகச்சேரி நீதிமன்றம் முன்பாக ஒன்று கூடிய சட்டத்தரணிகள் பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வாறாக பருத்திதுறை ,மல்லாகம், ஊர்காவற்துறை தீதிமன்றங்களின் சட்டத்தரணிகளும் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.