ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்தே ஈஸ்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது!

நாடாளுமன்ற அமர்வில் இன்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கலந்துகொண்டு தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

” கடந்த 2019 ம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் தாக்குதல் ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து நடைபெற்றதாக சகலருமறிந்தாலும் அது ஊகிப்பின் அடிப்படையிலான கருத்துக் கணிப்பாகவே காணப்படுகின்றது.

ஆனால் சனல் – 4 தொலைக்காட்சி வெளியிட்ட விபரங்கள் அனைத்தும் முழுமையாக விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பராராஜசிங்கம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் ஆகியோர் அரசாங்கத்தின் இராணுவப் புலனாய்வு ஒட்டுக் குழுக்களின் செயற்பாட்டாலே கொல்லப்பட்டனர்.

ஆனால் இன்று வரை யார் செய்தார்கள் ஏன் செய்தார்கள் என்ற விடயங்களை யாவருமறிந்தும் சாட்சிகள் சான்றுகளாக நிரூபிக்கப்படவி்ல்லை. ஆட்சியாளர்கள் இவை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவதனால் தான் நிருபி்க்கப்படாத சூழ்நிலைகளாக உள்ளது.

எனவே இவ் விடயம் தொடர்பில் சர்வதேச விசாரணையை நடைமுறைப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கூறியிருந்த விடயத்தை வரவேற்கின்றேன்.

ஆனால் 2009 ம் ஆண்டு மிக கொடூரமாக எம்மின மக்கள் கொன்றொழிக்கப்பட்டதையும் தமிழ் மக்களின் விடுதலை அமைப்பின் வானொலியில் பணியாளராக பணிபுரிந்த இசைப்பிரியாவின் ஆடைகள் களையப்பட்டு மானபங்கப்படுத்தி கொலை செய்த காணொலியையும் சனல் – 4 தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது.

இதேவேளை 2009 ம் ஆண்டு சர்வதேச தரவுகளின் படி 40000 பேராக இருந்தாலும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோர் கொன்றொழிக்கப்பட்டனர்.

2019 ம் ஆண்டு ஆட்சிமாற்றத்தின் பின்னர் கோட்டபாய ராஜபக்ச வடக்கு கிழக்கில் தமிழ் மக்களை இல்லாதொழிக்கவும் பௌத்த மயமாக்கலை ஏற்படுத்துவதற்காக நிர்வாக ரீதியாகவும் சட்டரீதியாகவும் பல முயற்சிளை மேற்கொண்டனர்.

பூர்வீகக் குடிகள் தமிழர்கள் என்பதற்கான சான்றுகள்

இலங்கையின் பூர்வீகக் குடிகள் தமிழர்கள் என்பதற்கான சான்றுகளை தொல்பொருட் திணைக்களத்தினூடாக அழித்தொழித்து பௌத்த சான்றுகளாக சட்ட ரீதியாக நிறுவுவதற்காக தொல்பொருட் திணைக்களத்திற்கென கிழக்கு மாகாணத்தில் செயலணியை நிறுவினார்.

இவற்றை விட முல்லைத்தீவு குருந்தூர் மலைப்பகுதியில் இன ரீதியாகவும், மத ரீதியாகவும் முரண்படக் கூடிய வகையில் ஆதி சிவன் ஐயனாரின் அடையாளங்களை அழித்து பௌத்த விகாரையை அமைப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்றவண்ணமுள்ளது.

இதைவிட விகாரைகள் அமைப்பது தொடர்பான பல சர்ச்சைகள் எழுந்துள்ளது. தமிழ் மக்களோ , தமிழ் மக்களின் விடுதலை அமைப்போ பௌத்த மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல என்பதுடன் பௌத்த மற்றும் சிங்கள மக்களை தமிழ் மக்களின் விடுதலை அமைப்போ தமிழ் மக்களோ ஆள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்ததில்லை எனவும் தெரிவித்தார்.

அதேவேளை 2019 ம் ஆண்டு ஈஸ்டர் குண்டுத் தாக்குதலூடாக ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக சிங்கள மக்களை ஏமாற்றியதைப் போல் 1956 ம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா தனிச் சிங்களச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.

இதிலிருந்து இன்று வரை தமிழர்களை அடக்க வேண்டுமென அரசியல் இலாபங்களுக்காக பொய்களைப் பரப்பி தமிழர்களுக்கெதிராக பல நாடுகளிலிருந்து பணத்தைப் பெற்று போர் தொடுத்ததன் விளவைாக இன்று நாடு பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.

தனிச் சிங்களம் கொண்டுவரப்பட்டதன் பிற்பாடு பொலன்நறுவை , காலி போன்ற இடங்களில் இந்து குருமார் தாக்கப்பட்டனர். அதன் பின் தமிழர்களின் பல்லைக்கழக அனுமதியைத் தடு்ப்பதற்காக புதிதாக சட்டங்கள் தடுக்கப்பட்டது. இதன் விளைவாகத் தான் தமிழர்கள் ஆயுதமேந்திப் போராடினார்கள்.

குருந்தூர் மலை தொடர்பாக ஜனாதிபதி , நீதியமைச்சர் மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் பல தடவைகள் கலந்துரையாடியும் இன்று வரை தீர்வுகள் கிடைக்கவில்லை. எனவே, சான்றுகள் அடிப்படையில் சர்வதேச ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஏனெனின் எமது இன மற்றும் மத சான்றுகள் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இவற்றை விட 2018 ம் ஆண்டு காலப்பகுதியில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் தொல்லியற் திணைக்களத்தால் நிலங்கள் பறிபோகும் நிலையிலிருந்தபோது அமைச்சராக இருந்தவர் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.

எனவே குருந்தூர்மலை தொடர்பான விடயங்களை தமிழ் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதுடன் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்” என சுட்டிக்காட்டினார்.