யாழ்நகர் பகுதியில் களவாடப்படும் மோட்டர் சைக்கிள்கள்

யாழ் நகர் பகுதியில் கடந்த இரண்டு மாத கால பகுதிக்குள் 13 மோட்டார் சைக்கிள்கள் களவாடப்பட்டுள்ளன.

யாழ். போதனா வைத்தியசாலை சூழல், மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள பகுதி ஆகிய இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களே களவாடப்பட்டுள்ளன.

களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களால் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் திருட்டு கும்பல்கள் கைது செய்யப்படவில்லை.

குறித்த திருட்டு கும்பல்கள் வலையமைப்பாக செயற்பட்டு வருவதாகவும், திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை உதிரி பாகங்களாக கழட்டி விற்பனை செய்வதனால், திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை மீட்கவோ, திருட்டு கும்பல்களை கைது செய்வோ பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை (06.09.2023) யாழ்.நகர் மத்தியில் உள்ள வங்கி ஒன்றின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி, திருடன் உருட்டி செல்வது வங்கியில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது.

குறித்த காணொளி காட்சியை அடிப்படையாக கொண்டு யாழ்ப்பாண பொலிஸார் திருடனை அடையாளம் கண்டுள்ளனர். கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.