ஆசிய – பசுபிக் வலய அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் அதிகாரிகளின் 5 ஆவது கலந்துரையாடல்

பிராந்தியத்தின் சுற்றாடல் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான ஆசிய – பசுபிக் பிராந்திய அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் அதிகாரிகளின் ஐந்தாவது கலந்துரையாடல் (UNEP) ஒக்டோபர் 03 – 06 திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளதென சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்தார்.

அதன் பிரதான அமர்வு ஒக்டோபர் 05 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளதோடு, ஐ.நா சுற்றாடல் நிகழ்ச்சி நிரல் மற்றும் சுற்றாடல் அமைச்சு இணைந்து ஏற்பாடு செய்யவுள்ள குறித்த  நிகழ்வில் பிராந்தியத்தின் சுற்றாடல் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நாடுகள், அரசாங்கங்களுக்கிடையிலான அமைப்புக்கள் உட்பட ஏனைய தரப்புக்களுக்கும் வாய்ப்பளிக்கபடும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.  

ஜனாதிபதி ஊடக மையத்தில் திங்கட்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

இம்முறை கலந்துரையாடலில்  ஆசிய பசுபிக் வலயத்தின் 41 நாடுகளின் அமைச்சர்கள், 300க்கும் அதிகமான வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் 100 க்கும் அதிகமான தொழில்வான்மையாளர்கள் பங்குபற்றுவர் என எதிர்பார்ப்பதாகவும், 2024 பெப்ரவரி 24 தொடக்கம் மார்ச் 01 ஆம் திகதி வரை நைரோபில் நடைபெறவிருக்கும் ஆறாவது ஐ.நா சுற்றாடல் சபையின் (UNEA) அமர்விற்கு இணையாக குறித்த  நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.        

 சுற்றால் அமைச்சின் மேலதிக செயலாளர் அஞ்சலி குமாரகம, அமைச்சின் அனைத்துலக தொடர்பாடல் பணிப்பாளர் குலானி கருணாரத்ன உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.