மனைவியை கொலை செய்த கணவருக்கு மரண தண்டனை 

எட்டு வருடங்களுக்கு முன்னர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரை குற்றவாளி என அறிவித்த முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி நவோமி தமரா விக்ரமசேகர இந்தத் தீர்ப்பை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

புத்தளம் மேல் நீதிமன்றில் இன்று (26) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், முல்லேகம, நவகத்தகம, விகாரை வீதியை  சேர்ந்த காமினி என்ற நபருக்கே இந்த மரண தண்டனை தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொலைச் சம்பவத்தின் போது சந்தேகநபருக்கு 33 வயது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் திகதி குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்துவிட்டு மாலையில் வீடு திரும்பிய துஷாரி காஞ்சனா என்ற 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே கொலை செய்யப்பட்டுள்ளார்.

நவகத்தகம பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதன்படி, சுமார் எட்டு வருடங்கள் நீடித்த நீண்ட விசாரணையின் பின்னர், குற்றவாளிக்கு மரண தண்டனையை விதித்து நீதவான் தீர்ப்பளித்தார்.