குழந்தையை அடித்துக் கொன்ற தாய்!

21 வயதான தாயொருவர் தனது ஆறு மாத கைக்குழந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊருபொக்க கட்டுவன பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் இதில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 30ஆம் திகதி தாயார் குழந்தையை வெந்நீரில் குளிப்பாட்டிக் கொண்டிருந்த போது வளர்ப்பு நாய் தாயின் காலை பிடித்து இழுத்ததில் குழந்தையின் தலை சுவரில் மோதியதாக கூறப்படுகிறது.

அப்போது வீட்டில் சிறு குழந்தையும் தாயும் மட்டுமே இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சம்பவத்திற்குப் பிறகு குழந்தையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை சாதாரணமாகவே இருந்ததாக கூறப்படுகிறது.

குழந்தையின் தாயார் இது தொடர்பில் தனது கணவருக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் மூக்கில் இரத்த கசிவு

பின்னர் மாலையில் கணவர் வந்து குழந்தையிடம் பேசி சிறிது நேரம் கழித்து குழந்தையின் மூக்கில் இரத்தம் கசிவதை பார்த்துள்ளார்.

தலை சுவரில் மோதிய பகுதி நீல நிறமாக மாறியதன் காரணமாக குழந்தையை ஹெய்கொட பிராந்திய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்ட போதிலும் வெள்ளம் காரணமாக வலஸ்முல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மருத்துவ சிகிச்சை பெற்று வந்த குழந்தை உயிரிழந்ததையடுத்து சந்தேக மரணம் எனக் கருதி ஊறுபொக்க பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த விசாரணைகளின் போது தாயினால் கைக்குழந்தை கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இததையடுத்து சந்தேகத்தின் பேரில் தாயை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை ஊருபொக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.