புலம்பெயர்ந்தவர் பணத்தில் யாழில் நிகழ்ந்த கொடூர சம்பவம்!

  யாழ்ப்பாணத்தில் இரு வீட்டாருக்கு இடையில்   ஏற்பட்ட முரண்பாட்டில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ள சம்பவத்தின் பின்னனியில் புலம்பெயர் தேசத்தில் இருந்து வந்தவர் செயல்பட்டதாக கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணம் கட்டுவன் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (6) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அப்பகுதியில் வசிக்கும் இரு வீட்டாருக்கு இடையில் , பாதை தொடர்பில் நீண்ட காலமாக முரண்பாடு ஏற்பட்டு வந்துள்ளது .

வன்முறை கும்பலை ஏவிவிட்ட புலம்பெயர் நபர்

இந்நிலையில் ஒரு வீட்டில் வெளிநாட்டில் இருந்து வந்த நபர் ஒருவர் தங்கி இருந்தார். இந்நிலையில் அவர் தான் தங்கியிருந்த வீட்டாருக்கு ஆதரவாக வன்முறை கும்பல் ஒன்றினை கூலிக்கு அமர்த்தி , அவர்களுடன் முரண்பட்ட வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.

குறித்த வன்முறை கும்பல் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு , வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டை தீக்கிரையாக்கி விட்டு தப்பி செல்ல முற்பட்ட வேளை பாதிக்கப்பட்ட வீட்டார் வன்முறை கும்பலை துரத்திச்சென்றுள்ளனர்.

இதன் போது , அவர்கள் தப்பி செல்லும் போது ஒரு மோட்டார் சைக்கிளை கைவிட்டு சென்றுள்ள நிலையில் அதனை பாதிக்கப்பட்ட வீட்டார் தீக்கிரையாக்கி உள்ளதாக கூறப்படுகின்றது.

இந் நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை நேற்று நள்லிரவு யாழ்.தென்மராட்சி மீசாலை மேற்கு பகுதியிலுள்ள வீட்டின்மீது இனம்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.