யாழில் பொலிஸார் வேடத்தில் கொள்ளையிட்டவர்கள் கைது

யாழ் – கந்தர்மடத்தில் உள்ள புடைவைக் கடை ஒன்றில் பொலிஸார் என்று தங்களை அறிமுகப்படுத்தி பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் தேடப்பட்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் நேற்று (18.10.2023) பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 23 ஆயிரம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது. கடைக்குள் நுழைந்த நால்வர் தங்களைப் பொலிஸார் என்று அறிமுகப்படுத்தி, கடையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகின்றது என்று தகவல் கிடைத்துள்ளது என்றும் தேடுதல் நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

கடைக்குள் நுழைந்த அவர்கள் அங்கு தேடுதல் நடத்தி, கடையில் இருந்த 23 ஆயிரம் ரூபா பணத்தை எடுத்துக் கொண்டு, கடையிலிருந்தவர்களை மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் இன்று இருவரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.