மரண வீட்டில் வர்த்தகர் வெட்டிக் கொலை

சீதுவ – லியனகேமுல்ல பிரதேசத்தில் உள்ள மரண வீடொன்றுக்கு முன்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர் ஒருவர் இன்று (07) காலை கூரிய மன்னா கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சீதுவ பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சம்பவத்தில் தொம்மகே எரோசன் ரஜீந்திர பெர்னாண்டோ என்ற 46 வயதான, வர்த்தகர் ஒருவரே உயிரிழந்தார்.

இவர் மீது நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் இரண்டு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இரவு வேளைகளில் மரண வீடுகளில் பணத்திற்காக சூதாட்டத்தில் ஈடுபடும் நபர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 01.30 மணியளவில் சீதுவ, லியனகேமுல்ல பிரதேசத்தில் உள்ள மரண வீடொன்றிற்கு முன்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த இவரை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் கூரிய மன்னா கத்திகளால் தாக்கியுள்ளனர்.

கொலைச் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு நீர்கொழும்பு நீதவான் நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன், சடலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.