சூரிய மின்சக்தி திட்டத்தில் பாரிய ஊழல்!சஜித் காட்டம்

அரசாங்கம் யுனைடட் சோலார் எனர்ஜி நிறுவனம் மூலம் பூநகரியில் 700 மெகாவாட் சூரிய சக்தி மின் வலு உற்பத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கியுள்ளது என்றும், இத்திட்டத்தின் பின்னணியில் மறைக்கப்பட்ட பல தகவல்கள் இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் பூனகரியில் புதிய கிளிநொச்சி கிரிட் உப சந்தை வரை தேவையான கடத்தி இணைப்பு மார்க்கங்களை உருவாக்குதல் மற்றும் 100% மின்கல சேமிப்பு ஆற்றல் திறன் கொண்ட 700 மெகாவாட் சூரிய சக்தி மின் வலு நிலையத்தை உருவாக்கும் திட்டம் ஒரு வேலைத்திட்ட முன்னெடுப்பாக நம்பிக்கையளித்தாலும்,

முறையான மற்றும் வெளிப்படையான கொள்முதல் முறையின்றி செயல்படும் “புதுப்பிக்கத்தக்க எரிசக்தி”என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் மின்சாரத் துறையில் நடக்கும் மற்றொரு மிக பாரிய ஊழல் மோசடியே இது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

விசேட கருத்தொன்றை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

700 மெகாவாட் சோலார் மின் உற்பத்தி நிலையம் மற்றும் 100% மின்கல சேமிப்பு திறன் கொண்ட கடத்தி இணைப்பு மார்க்கங்களை உருவாக்கும் பொறுப்பும், அமைச்சரவையின் அனுமதியுடன் யுனைடட் சோலார் எனர்ஜி நிறுவனத்திற்கே வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்நிறுவனம் சோலார் பேனல்கள் விநியோகம் மற்றும் அதன் முகவர் செயல்பாடுகளை மட்டுமே மேற்கொண்டு வருவதாகவும்,

இந்நிறுவனத்திற்கு இடப்பரப்பொன்று இல்லை என்றும், எந்தவொரு மிதக்கும் சூரிய மின்னுற்பத்தி வலுப் பொறி திட்டத்தையும் முன்னெடுக்காத எந்த அனுபவமும் இல்லாத யுனைடட் சோலார் எனர்ஜி நிறுவனத்திற்கு இந்த அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எந்த அனுபவமும் இல்லாத நிறுவனமே இது,

அவுஸ்திரேலியாவில் உள்ள இந்நிறுவனம் எந்தவித மின்கல சேமிப்பு திட்டத்தையும் மேற்கொண்ட ஓர் நிறுவனம் அல்ல என்றும், அவுஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்தில் 400 மெகாவாட் திறன் கொண்ட மிகப்பெரிய சூரிய மின் கல சேமிப்புத் திட்ட நிலையமாக  இருந்தாலும், இது பிரான்ஸ் நிறுவனமொன்றால் 414 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்பட்டு பூர்த்தியாக்கப்பட்ட ஓர் வேலைத்திட்டம் என்றும்,எந்த அனுபவம் இல்லாத இந்த யுனைடெட் சோலார் நிறுவனத்துக்கு 700 மெகாவாட் திறன் கொண்ட சூரிய சக்தி மின் வலு உற்ப்பத்தி நிலையத்தை அமைக்க அரசாங்கம் பொறுப்பு வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

அவுஸ்திரேலியாவில் உள்ள மிகப் பெரிய மின்கல சேமிப்பு திட்டம் 1 ஜிகாவாட்டைக் கொண்டுள்ளது என்றாலும், யுனைடெட் சோலார் எனர்ஜி நிறுவனம் இலங்கையில் 750 ஜிகாவாட் மின்கல சேமிப்புக் கட்டமைப்பை கிளிநோச்சி பூநகரியில் நிறுவவுள்ளதாக கூறுகிறது, 700 வாட் பேனல்களை பயன்படுத்தினால் 700 மெகாவாட் உற்பத்தி செய்ய முடியும் என்றும், இதற்கு குறைந்தபட்சம் 782 ஏக்கர் தேவை என்று கணக்கிடப்பட்டுள்ளதாகவும்,

இந்த வேலைத்திட்டத்தைச் செயல்படுத்தத் தெரிவு செய்யப்பட்டுள்ள நிறுவனம் பாரிய அளவிலான வேலைத்திட்டத்தை முன்னெடுத்த எந்த அனுபவமும் இல்லாத ஓர் நிறுவனமாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

இலங்கையில் காணிகளை அபகரிக்கும் திட்டமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது!

சோலார் பேனலின், சூரிய சக்தி மின் உற்பத்தித் திட்டத்தின் ஆயுட்காலம் 25 ஆண்டுகளே என்றாலும், இத்திட்டத்தை ஆரம்பிக்க இந்நிறுவனம் 35 வருடங்களைக் கோருகின்றனர் என்றும், மேலும் 10 வருடங்களை ஏன் அதிகமாக கோருகின்றனர்? எமது நாட்டில் 782 ஏக்கர் காணி இடப்பரப்பை மேலும் 10 ஆண்டுகளுக்கு பயன்படுத்தி இலாபத்தை ஈட்டவா இவ்வாறு கோருகின்றனர் என்ற கேள்வி எழுகிறது, இவ்வாறே இந்த உடன்பாடுகளை எட்டியுள்ளனர், இது சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தகுதியற்ற பனிப்பாளர்கள் குழுவைக் கொண்ட நிறுவனம்,

இந்நிறுவனத்தின் தலைவராக ரிச்சர்ட் வகாஸ் என்பவர் செயற்படுகிறார், இவர் சோலார் பேனல்களை விநியோகிப்பவர் என்றும், கணக்காளராக தங்காலையைச் சேர்ந்த சுஜீவ நிஷாந்த திலகரத்ன என்ற ஒருவர் செயற்படுகிறார், அவரும் இந்த பனிப்பாளர் சபையில் ஒருவராக இருந்தாலும் இந்நபர் விக்டோரியாவில் சொத்து மற்றும் இடம் சார்ந்த தரகு வியாபாரி என்றும்,அலெக்ஸ் சந்திரசிறி எனும் மற்றைய பனிப்பாளர் சபை உறுப்பினர் விக்டோரியாவில் உள்ள உணவகம் ஒன்றின் உணவு தொடர்பான முகாமையாளர் என்றும், ஷான் பாலசூரிய என்ற மற்றுமொரு பனிப்பாளர் சபை உறுப்பினர் விக்டோரியாவில் இணைய வடிவமைப்பாளர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக் காட்டினார்.

போட்டி முறைமையில் இது நடக்க வேண்டும் என்றாலும், பெயரிடப்பட்ட நிறுவனத்தால் இவ்வளவு பாரிய அளவிலான திட்டத்தை மேற்கொள்ள முடியாது என்றும், இது தொடர்பில் ஜனாதிபதியும் சம்பந்தப்பட்ட அமைச்சரும் பாராளுமன்றத்தில் பேசினாலும்,

எத்தகைய அனுபவமும் இல்லாத ஒரு நிறுவனத்திற்கு இதை வழங்குவதில்,

“இதற்கான அனுமதிப் பத்திரத்தை வேறு நிறுவனத்திற்கு விற்கும் நிலை”ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இவ்வாறான ஊழல்மிக்க உடன்படிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்குவது வெட்கக்கேடான செயல் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இது முற்றிலும் மோசடியான கொடுக்கல் வாங்கலாகும்,

2022 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மின்சாரத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது,10 மெகாவாட்டிற்கு மேல் புதுப்பிக்கத்தக்க மின் ஆற்றல் திட்டங்களுக்கு டெண்டர் முறையை அமுல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி யோசனை முன்வைத்தாலும், இதை அரசாங்கம் நிராகரித்ததாகவும், அது ஏன் நிராகரிக்கப்பட்டது என்பது இந்த கொடுக்கல் வாங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கத்தின் இத்தகைய ஊழல் நடவடிக்கைகளுக்கு அதிருப்தி தெரிவிப்பதாகவும், இதற்கு தேவையான சகல நடவடிக்கைகளிம் எடுக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

வங்குரோத்து நாட்டில் ஊழல்,மோசடி மற்றும் திருட்டை இல்லாதொழிப்பது ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கமாகும் என்றபடியால்,விசேடமாக இதை வெளிக்கொணர்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக் காட்டினார்.