தமிழக கடற்றொழிலாளர்கள் 25 பேருக்கு விளக்கமறியல்!

பருத்தித்துறை கடற்பரப்பில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருந்த 25 தமிழக கடற்றொழிலாளர்களுக்கான விளக்கமறியல் உத்தரவை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நீடித்து பருத்தித்துறை நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து கடந்த டிசம்பர் 09 ஆம் திகதி 2 படகுகளுடன் நாகப்பட்டினத்தை சேர்ந்த 25 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒரு படகில் பயணித்த 25 கடற்றொழிலாளர்கள் கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளினால் இன்று (22) பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் கிருசாந்தன் பொன்னுத்துரை முன்பாக முன்னிலைப்படுத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையினை மன்றில் தாக்கல் செய்வதற்கு கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளினால் அவகாசம் கோரப்பட்டதை அடுத்து வரும் டிசம்பர் 28 ஆம் திகதிக்கு வழக்கு தவணையிடப்பட்டு அதுவரை 12 கடற்றொழிலாளர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

13 கடற்றொழிலாளர்களுக்கு நிபந்தனையுடனான விடுதலை அறிவிக்கப்பட்டாலும், கடற்படையினரை தாக்கிய வழக்கில் கடற்றொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை பொலிஸார் கேட்டுக் கொண்டதற்கு அமைய கடற்றொழிலாளர்களை எதிர்வரும் 28 ஆம் திகதி அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.