80,000க்கும் அதிகமான நீர் பாவனையாளர்களின் விநியோகம் துண்டிப்பு!

கடந்த வருடத்தில் 80,000க்கும் அதிகமான நீர் பாவனையாளர்களின் நீர் விநியோகம் கட்டணம் செலுத்தாமையால் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, 30 இலட்சம் நீர் பாவனையாளர்களில் 80,970 பேருக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக சபையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

இவர்களில் 63,150 வீட்டு நீர் பாவனையாளர்களும் மற்றும் 17,820 பிற  நீர் பாவனையாளர்களும் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்ட நுகர்வோரிடமிருந்து 1,909 மில்லியன் ரூபா மீளப்பெற வேண்டியுள்ளதாக சபையின் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை,   நீர் கட்டணத்தை செலுத்தாமையால் 6,118 மில்லியன் ரூபாவை சபை அறவிட வேண்டியுள்ளது.

அவற்றுள் வைத்தியசாலைகளில் இருந்து 182 மில்லியன் ரூபாவும், பாடசாலைகளில் இருந்து 175 மில்லியன் ரூபாவும், இராணுவம் மற்றும் பொலிஸாரிடமிருந்து 116 மில்லியன் ரூபாவும்  நீர் வழங்கல் சபை வசூலிக்க வேண்டியுள்ளது.

இதேவேளை, நீர் இணைப்புகளை துண்டித்துள்ள வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய தொகையில் 25 வீதத்தை செலுத்தி மீண்டும் இணைப்பை பெற்று மீதி கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.