தனியார் காணியிலிருந்து துப்பாக்கி ரவைகள் மீட்பு!

முல்லைத்தீவில் தனியார் காணி ஒன்றிலிருந்து T- 56 துப்பாக்கிக்கான 100 ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உடுப்புக்குளம் பகுதியில் தனியார் வீட்டு காணியில் துப்பாக்கி ரவைகள் காணப்படுவதாக நேற்று (24-01-2024) மாலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த இடத்திற்கு சென்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

சோதனையின் போது, சந்தேக நபரின் வீட்டு காணியில் இருந்து T-56 துப்பாக்கிக்கான 100 ரவைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், 33 வயது மதிக்கதக்க சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தபடவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.