தமிழர் பகுதியில் புதையல் தோண்டியவர்கள் கைது!

புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள தென்னை தோட்டத்தில் புதையல் தோண்டியபோது 06 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்றையதினம் (12-02-2024) இடம்பெற்றுள்ளது.

இரணைபாலை பிரதேசத்தில் யுத்தத்தின் போது புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தங்கம் மற்றும் சொத்துக்களை தேடும் நோக்கில் அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்த 06 நபர்களை புதுகுடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹேரத் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இடத்தில் தண்ணீர் எடுப்பதற்காக கட்டப்பட்ட கிணற்றின் அருகில் 03 அடி நீளமும் 06 அடி ஆழமும் கொண்ட குழி தோண்டப்பட்டிருந்ததுடன், இச் சம்பவம் தொடர்பில், நெடுங்கேணி, மதவாச்சி, பதவியா, தெய்நதர, ஹக்மான போன்ற பகுதிகளை சேர்ந்த 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும், சான்று பொருட்களையும் இன்றையதினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.