பெருந்தோட்ட மக்கள் தமிழீழத்தை கோரவில்லை

பெருந்தோட்ட மக்கள் தமிழீழத்தை கோரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் வட்டவளை பகுதி பாடசாலையொன்றில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட மக்கள் பொருளாதார ரீதியில் நலிவடைந்திருந்தாலும் அறிவானவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் சரியான தீர்மானத்தை எடுப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடி

அரசியல் சாசனத்தின் அடிப்படையில் தேர்தல் நடைபெறும் என கருதுவதாகவும், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தேர்தலை நடத்துவார் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில் கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து பொருத்தமான ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் நலன்களுக்காக தீர்மானம் எடுத்தால் நாட்டுக்கு பாரிய பாதிப்பு ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மலையக மக்களின் வீட்டு, காணி, கல்வி மற்றும் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

எமது மக்கள் ஈழத்தையோ, ஆயுதங்களையோ கோரவில்லை எனவும் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.