வரி இலக்கத்தில் ஏற்ப்படப்போகும் மாற்றம்!

தேசிய அடையாள அட்டை இலக்கங்களை (TIN) வரி இலக்கமாக பயன்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வழங்கப்பட்ட ஒன்பது இலட்சம் (900,000) (TIN) வரி இலக்கங்களை மாற்ற வேண்டியதன் அவசியத்தால் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2016 ஆம் ஆண்டு தேசிய அடையாள அட்டை எண்ணை வரி இலக்கமாக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் அறிவிப்பு
இதற்கமைய, தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்துவது குறித்து நிதிக்குழுவினால் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள் அதிக கவனம் செலுத்தவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

எவ்வாறாயினும், தேசிய அடையாள அட்டை இலக்கத்தை மீண்டும் வரி இலக்கமாக பயன்படுத்த முன்மொழியப்பட்டுள்ள போதிலும், அதனை நடைமுறைப்படுத்துவதில் பல நெருக்கடி நிலைகள் ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சில சமயங்களில், ஒரே எண்ணில் ஒன்றுக்கு மேற்பட்ட அடையாள அட்டைகள் வழங்கப்படுவதால், வரி இலக்கங்களை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கடந்த காலங்களில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஒரே நபருக்கு பல இலக்கங்களை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றன.

இந்த பிரச்சினைகள் இன்னும் தீரவில்லை எனவும், சிலர் தாங்கள் பெற்ற கூடுதல் இலக்கங்களை இரத்து செய்துள்ளதாகவும், இதன் காரணமாக வரி செலுத்தும் தொகையை சரியான இலக்கத்திற்கு மாற்றுவதில் சிக்கல்கள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

நடைமுறை சிக்கல்கள்
மேலும், புதிதாக வழங்கப்பட்ட 100,000க்கும் மேற்பட்ட இலக்கங்களில் பல நடைமுறைச் சிக்கல்கள் உருவாகியுள்ளதாகவும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் வரி இலக்கம் வழங்க அரசு முடிவு செய்திருந்த நிலையில், பின்னர் பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்து வரி எண்ணை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டது.

எவ்வாறாயினும், வரி இலக்கம் வழங்குவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக மார்ச் 31 ஆம் திகதி வரை ஒத்திவைக்க அரசாங்கம் முடிவு செய்தது.

இதற்கமைய, கடந்த 26 ஆம் திகதி வரை 109,000 இலக்கங்கள் வழங்குவது தடைப்பட்டதாகவும், இதன் காரணமாக ஏப்ரல் முதலாம் திகதி முதல் வரி இலக்கத்தை கட்டாயமாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் உள்நாட்டு இறைவரி திணைக்கள வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.