சமூக வலைத்தளங்களில் வௌியான பரீட்சை வினாத்தாள்!

மேல் மாகாண கல்வித் திணைக்களத்தால் இன்று (01) நடத்த திட்டமிடப்பட்டிருந்த பாடசாலை ஆண்டு இறுதி தவணைப் பரீட்சையின் சில வினாத்தாள்கள் நேற்று (29) இரவு சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில், இன்று (01) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆசிரியர்கள் குழுவொன்று முறைப்பாடு ஒன்றையும் சமர்ப்பித்துள்ளனர்.

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டுக்கான ஆண்டு இறுதி தவணைப் பரீட்சைகள் இத்தினங்களில் நடைபெற்று வருகின்றன.  

அதன்படி, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான விஞ்ஞானம் பாடத்திற்கான பரீட்சை இன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், மேல் மாகாண கல்வி திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தரம் 10 இன் விஞ்ஞான முதலாம் வினாத்தாள் மற்றும் தரம் 11 இன் விஞ்ஞான இரண்டாம் வினாத்தாள் நேற்று மாலை 7  முதல் 8 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோமாகம, மொரட்டுவ மற்றும் கம்பஹா பிரதேசங்களில் இருந்து இவ்வாறு வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நேற்று இரவு சமூக வலைத்தளங்களில் பரிமாறப்பட்ட வினாத்தாள்களே இன்று மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.